திப்பிலியின் மருத்துவப் பயன்கள்

திப்பிலியின் மருந்துப் பயிர்களில் மிகவும் அதிக அளவில் இந்திய மருத்துவ முறையில் பயன்படுத்தப்படுவது திப்பிலியாகும். மிளகு மற்றும் வெற்றிலை வகையைச் சார்ந்த இது “பைப்பர் லாங்கம்” ) என்ற தாவரப் பெயரால் அழைக்கப்படுகிறது. கொடி வகையைச் சார்ந்த திப்பிலி ஒரு நீண்ட காலப் பயிராகும். நிறைய கிளைகளுடன் அதிக உயரம் வளராமல் இரண்டு அல்லது மூன்று அடி அகலம் வரை வளரும். செடிகள் உறுதியான வேர்களைக் கொண்டிருக்கும். பூக்கள் மிகவும் சிறியதாகவும், இரண்டு முதல் ஐந்து செ.மீ அளவு உள்ளதாகவும் இருக்கும். இலைகள் 5 முதல் 9 செ.மீ நீளமாகவும் 3 முதல் 5 செ.மீ அகலமானதாகவும் இருக்கும்.

திப்பிலியின் காய்கள் உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், உயர் ரக மதுபான வகைகள் மற்றும் வாசனைப் பொருட்களில் பெரிதும் பயன்படுத்தப் படுகின்றன. உலர்ந்த திப்பிலியிலிருந்து நீராவி வடிப்பு மூலமாக எண்ணெய் பிரிக்கப்படுகிறது. காசநோய் கிருமிகளை எதிர்க்கும் தன்மை திப்பிலிக்கு உண்டு. இந்திய மருத்துவத்தில் பல்வேறு நோய்களைத் தாக்கும் மருந்துப் பொருளாக தொன்றுதொட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. சித்த மருத்துவத்தில் திப்பிலியானது சுக்கு மிளகோடு சேர்த்து “திரிகடுகம்” எனப்பெயர் பெறுகிறது. பச்சைத் திப்பிலி கபத்தை உண்டாக்கும். ஆனால் உலர்ந்த திப்பலியோ கபத்தை அகற்றுவதற்கு பயன்படுகிறது. திப்பிலி இருமல், இரைப்பு, தொண்டைப்புண், தொண்டைக் கட்டு இவற்றைக் குணமாக்கும். காது, மூக்கு சம்பந்தப்பட்ட கப நோய்களையும் போக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.

திப்பிலியின் மருத்துவப் பயன்கள்:

1) திப்பிலிப்பொடி, கடுக்காய்ப்பொடி சம அளவு எடுத்து தேன்விட்டு குழைத்து1/2 தேக்கரண்டி அளவு காலை, மாலை என இருவேளை உண்டுவந்தால் இளைப்பு நோய்நீங்கும்

2) திப்பிலிப் பொடியை பசுவின் பாலில் விட்டு காய்ச்சி அருந்தி வந்தால் இருமல், வாய்வுத் தொல்லை, மூர்ச்சை, முப்பிணி நீங்கும்.

3) திப்பிலியை பொடியாக்கி 1:2 விகிதம் வெல்லம் கலந்து உட்கொள்ள விந்து பெருகும். நெய்யுடன் கலந்து சாப்பிட ஆண்மை பெருகும்.

4) திப்பிலியை வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் எடுத்து தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர இருமல், தொண்டைக் கமறல், வீக்கம், பசியின்மை, தாது இழப்பு குணமாகும். இரைப்பை, ஈரல் வலுப்பெறும்.

5) திப்பிலி, மிளகு, தோல் நீக்கிய சுக்கு சம அளவாக எடுத்து வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் தேனுடன் கலந்து 3 வேளையாகச் சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், நீர்க்கோவை, தொண்டைக் கமறல் குணமாகும்.

6) திப்பிலியை இடித்துப் பொடியாக்கி 1 தேக்கரண்டியளவு எடுத்து சிறிது தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர இருமல், கபம், வாய்வு நீங்கும். செரிமானம் அதிகரிக்கும்.

7) திப்பிலி 50 கிராம், கரிசலாங்கண்ணி இலை 25 கிராம், 1/2 லிட்டர் நீரில் போட்டு நீரைச் சுண்டக் காய்ச்சிய பின் நிற்கும் திப்பிலியையும் தழையையும் இள வறுப்பாய் வறுத்துப் பொடித்த எடைக்குச் சமமாகப் பொரிப்பொடி சேர்த்து அதே அளவு சர்க்கரை கூட்டி 5 கிராம் அளவு 2 வேளை தொடர்ந்து சாப்பிட்டுவர இருமல், களைப்பு நீங்கும்.

8) திப்பிலி 10 கிராம், தேற்றான் விதை 5 கிராம் சேர்த்துப் பொடியாக்கி கழுநீரில் 5 கிராம் எடை அளவைப் போட்டு 7 நாள் காலையில் குடித்துவர வெள்ளை, பெரும்பாடு நீங்கும்.

9) திப்பிலிப் பொடி, கடுக்காய்ப் பொடி சம அளவாக எடுத்துத் தேன் விட்டுப் பிசைந்து இலந்தைப் பழ அளவு இருவேளை தொடர்ந்து 3 மாதம் சாப்பிட்டு வர இளைப்பு நோய் குணமாகும்.

10) திப்பிலிப் பொடி 10 கிராம் அரை மி.லி.பசுவின் பால் விட்டு காய்ச்சி 2 வேளை குடித்துவர இருமல், வாய்வு, மூர்ச்சை, முப்பிணி குணமாகும்