நொச்சி இலையின் மருத்துவ நன்மைகள்!

பொதுவாக நாம் நம் ஊர் தோட்டப் பகுதிகளில் வயல்வெளிகளில் பல்வேறு தாவரங்கள் தானாக முளைத்துக் கிடப்பதைப் பார்த்திருப்போம்! இவைகளெல்லாம் களைகள் என விவசாயிகள் பிடுங்கி எறியக்கூடும். ஆனால், அந்த செடிகள் ஒவ்வொன்றிற்குள்ளும் ஒவ்வொரு விதமான தன்மை உண்டு! அவை ஒரு வேளை சிறந்த மூலிகையாகவும் கூட இருக்கலாம்.அத்தகைய ஒரு செடிதான் இந்த நொச்சி! இதெல்லாம் எனக்கு எப்படி தெரியும் என்று நினைக்கிறீர்களா… நமது உமையாள் பாட்டி அன்றி வேறு யார் இதையெல்லாம் சொல்லப் போகிறார்கள்?! புதர்செடியாகவும், சிறிய மரமாகவும் வளரும் இந்த தாவரத்தின் இலைகள் கூட்டிலை வகையினால் ஆனது. இலைகள், வேர், பட்டை, மலர்கள், கனி, விதை மற்றும் முழுத்தாவரமும் பயன்படுபவை. கிராமப்புறங்களில் தானியங்களை சேமிக்கும் பொழுது நொச்சித்தழைகளை உடன் வைத்து விடுவர். இது பூச்சிகள் தோன்றுவதை தடுக்கும்.

உடல் உறுப்புகளின் செயலியல் நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்தி சரி செய்ய வல்லது. பால்வினை நோய்களை குணப்படுத்துகிறது. நோய்க்கிருமிகளை ஒழிக்க வல்லது. மேல்பூச்சாக பெரிதும் பயன்படுகிறது. வீக்கம் மற்றும் மூட்டுவலி போக்க உதவும். மூட்டுவலி உள்ளவர்கள் நொச்சி இலைகள் போட்டு காய்ச்சிய நீரில் குளித்தால் பயன் அடைவர். காய்ந்த இலைகளின் புகை தலைவலி மற்றும் சளி அடைப்பினை நீக்கும். நாள்பட்ட புண்களில் இருந்து ஒழுகும் துர்நாற்றமுள்ள சீழ் மற்றும் பூச்சிகளை ஒழிக்க இலையின் சாறு மேல் பூச்சாக பயன்படுத்தப்படுகிறது. இலைச்சாறு கொண்டு தயாரிக்கப்பட்ட தைலம் காசநோய் புண்களை ஆற்ற வல்லது. அதுமட்டுமல்ல கொசு விரட்டுவதில் முக்கியப் பங்கு இந்த நொச்சிக்கு உண்டு.